Tuesday, August 27, 2013

என்னைக் கவர்ந்த கவிதை - சுதந்திர சிறகுகள்

கீழே உள்ள இணைப்பில் கவிதையை வாசித்துக் கொள்ளுங்கள். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
http://pandukavi16.blogspot.in/2013/08/11-2013.html

Monday, June 17, 2013

நாடி ஜோதிடம் - ஏமாறப்போகிறோம் என்று தெரிந்தே ஏமாந்த கதை


கடவுள், பேய், அருள்வாக்கு, ஜோதிடம், நியூமராலஜி  இது போன்ற விஷயங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது. என் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவருக்கு இதுமாதிரி விஷயங்களில் அதிக நம்பிக்கை உண்டு. பொழுது போகாத நேரங்களில் இதைப் பற்றி விவாதங்கள் நிறைய நடக்கும். ஒருநாள் பேச்சு நாடி ஜோதிடம் பற்றி சென்றது. "திருவான்மியூரில் ஒரு நாடி ஜோதிட நிலையம் உள்ளது. அங்கு நம்முடைய விரல் ரேகையை மட்டும் கொடுத்தால் போதும். நம் பெயர், அப்பா பெயர், அம்மா பெயர், உடன் பிறந்தவர்கள் பெயர் என்று எல்லாமே சொல்லி விடுவார்கள். நம்மை பற்றிய அத்தனை விஷயங்களும் அந்த ஓலையில் இருக்கும்" என்று அவர் சொன்னார். மேலும் உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஓலைகள் இருக்கும் என்றார். அவரிடம் மேலும் துருவி துருவி விசாரித்ததில் எல்லா விஷயங்களையும் நம் வாயிலிருந்தே வரவைத்து சொல்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக புரிந்தது. இருந்தாலும் அவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. நீங்களே நேரடியாக அங்கு வந்தால் தான் நீங்கள் நம்புவீர்கள் என்று சொன்னார். ஏமாறப்போகிறோம் என்று தெரிந்தாலும் அவரை திருத்தலாம் என்பதற்காக சரி என்று சொல்லிவிட்டேன்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை பதினொரு மணிக்கு அங்கு சென்றோம். நாங்கள் சென்ற பொழுது அவர் அங்கு இல்லை. அவரின் உதவியாளர் ஒருவர் எங்களை வரவேற்று உட்கார வைத்தார். எங்களைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தார். அவர் அறையில் ஒரு மணி நேரம் காத்திருந்தோம். அதில் டிவி, நிறைய ஜோதிடம் பற்றிய புத்தகங்கள் மற்றும் ஒரு கம்ப்யூட்டர் இருந்தது. கம்ப்யூட்டரில் மைக் இணைக்கப்பட்டு இருந்தது. நம் ஓலையில் உள்ள பலன்களை படித்து அதை சிடியில் பதிந்து தருவார்களாம்.

சிறிது நேர காத்திருப்புக்கு பின் ஜோதிடர் வந்தார். பேன்ட் ஷர்ட் போட்டு வந்தவர் காவி உடை மாற்றிக்கொண்டார். எங்களை நோக்கி "யாருக்கு பார்க்கணும்?" என்று கேட்டார். உறவினர் ஒருவருக்கு என்று சொன்னேன். அவர் கை ரேகை கொண்டு வந்திருக்கிறீர்களா என்று கேட்டார். ஆமாம் என்றேன். பின்னர் நான் கொண்டு போயிருந்த ரேகை வைத்த தாளை வாங்கிக்கொண்டார். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க இந்த ரேகைக்கான ஓலைகளை எடுத்து வருகிறேன் என்று சொல்லி சென்று விட்டார். பத்து நிமிடம் கழித்து கையில் மூன்று கட்டுகளை எடுத்து வந்தார். ஒவ்வொரு கட்டிலும் ஐம்பது ஓலைகள் இருக்கலாம். ஒளியின் இரண்டு பக்கமும் புரியாத பாஷையில் ஏதோ இருந்தது.

வந்து அமர்ந்தவர், வாயில் நுழையாத ஏதோ ஒரு மந்திரத்தை உச்சரித்தார். "நான் கேட்பதற்கெல்லாம் ஆமாம் இல்லை என்று மட்டும் பதில் சொல்லுங்கள். ஓலையை எடுத்துவிடலாம்" என்றார். சரி என்றேன். அப்படியே என்னுடைய கைபேசியில் voice recorder on பண்ணி வைத்துவிட்டேன்.

"அவர் பெயர் "ம" கர வரிசையில் ஆரம்பிக்குமா?"

"இல்லை"

"க?"

"இல்லை"

"ச?"

"இல்லை"

இப்படியே தமிழில் உள்ள முக்கால்வாசி எழுத்து வரிசைகளை கேட்டு  கடைசியில் முதல் எழுத்து "த" கர வரிசையில் வரும் என்று கண்டுபிடித்து விட்டார். ஆஹா!  என்ன ஒரு கண்டுபிடிப்பு. அதன் பிறகு த, தா, தி, தூ என்று ஒரு நூறு பெயர்கள் சொல்லி இருப்பார். இல்லை இல்லை என்று சொல்லி சொல்லி அலுத்துவிட்டது. கடைசியில் ஒரு வழியாக சரியான பெயரை சொன்னார். அப்பாடா நிம்மதி என்று இருந்தது. பெயரை கண்டுபிடிக்க முயற்சி பண்ணிக்கொண்டிருக்கும்போது இடை இடையே அவர் கேட்ட கேள்விகள்:

"அவர் படித்துக்கொண்டிருக்கிறார்"

"இல்லை"

"திருமணம் ஆகி விட்டது"

"இல்லை"


"பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்"

"ஆம்"

"ஜாதகம் தட்டி தட்டி போகிறது"

"ஆம்"

"அப்பா இருக்கிறார்"

"இல்லை"

"அம்மா இருக்கிறார்"

"ஆம்"

"இவர் வேலையில் இருக்கிறார்"

"ஆம்"

"கம்ப்யூட்டர் வேலை"

"ஆம்"

"இவருக்கு ஒரு அண்ணன் உண்டு"

"இல்லை"

"ஒரு தங்கை உண்டு"

"ஆம்"

"தங்கைக்கு திருமணம் ஆகி விட்டது"

"ஆம்"

"இவர் பிறந்த வருடம் 1980"

"இல்லை"

"1985"

"ஆம்"

"பிறந்த மாதம் செப்டம்பர்"

"இல்லை"

"ஆகஸ்ட்"

"இல்லை"

"ஜனவரி"


"இல்லை"

"நவம்பர்"

"இல்லை"

"ஜூலை"

"ஆம்"

இதேபோல் ஒன்று முதல் முப்பத்தொன்று வரை எல்லா நம்பரையும் சொல்லி தேதி கண்டுபிடித்தார்.

அடுத்தது அப்பாவின் பெயர் கண்டுபிடிக்க போகிறேன் என்று சொல்லி அதே "ம" கர "த" கர கேள்விகளை கேட்டு இம்சை பண்ணிக்கொண்டிருந்தார். இவ்வளவு நேரமும் ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு ஓலையை திருப்பிக்கொண்டே வந்தவர், ஓலை காலியாகப்போகின்றது என்றதும் ஒரே ஓலையை வைத்துக்கொண்டு நான்கைந்து கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். அப்பா பெயரை கண்டுபிடித்த பிறகு அம்மா பெயரையும் இதே முறையில் கண்டுபிடித்தார். அதையெல்லாம் விளக்கமாக போட்டால் ஒரு இருபது பக்கத்துக்கு எழுதும் அளவுக்கு போகும்.

எல்லாவற்றையும் என் வாயில் இருந்தே கேட்டு விட்டு இறுதியாக ஒரு ஓலையை எடுத்து "இதுதான் உங்கள் ஓலை. படிக்கிறேன் கேளுங்கள். இவர் பெயர் ....... பிறந்த தேதி ........... அப்பா பெயர் ....... அம்மா பெயர் ...... உடன் பிறந்தது ஒரு தங்கை. தங்கைக்கு திருமணம் ஆகிவிட்டது. எல்லா விபரமும் சரியாக உள்ளதா?" என்று கேட்டார். ஆம் என்றேன். "தட்சிணை ஐந்நூறு ரூபாய் அகத்தியர் பாதத்தில் வைத்து வணங்கிவிட்டு செல்லுங்கள். பலன்கள் எழுதி வைக்கிறேன். மூன்று மணி நேரம் கழித்து வந்து வாங்கி செல்லுங்கள்" என்றார். திரும்பி வந்த பிறகு எழுதி வைத்திருந்த நோட்டை படித்து USB Audio recorder ல் பதிவு செய்து அதை கணினி மூலம் CD யில் பதிந்து கொடுத்தார்.

அந்த நோட்டில் குறிப்பாக எந்த பலனும் சொல்லவில்லை.

  • 29 ல் இருந்து 31 வயதுக்குள் திருமணம் ஆகும். 
  • அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போகும். தகுந்த சிகிச்சை செய்தால் குணமாகும். 
  • அம்மாவுக்கு எதிர்காலத்தை நினைத்து பயம் இருக்கும். 

இப்படி நாம் சாதாரணமாக யூகிக்கக் கூடிய விஷயங்களே இருந்தன. கணவனை இழந்த மனைவி எதிர்காலத்தை நினைத்து பயப்படாமல் இருப்பார்களா? உடல் நலம் சரியில்லாமல் போவது மனிதனாய் பிறந்த அனைவருக்கும் பொதுவானது. இதெல்லாம் ஓலையில் உள்ளது என்று வாய் கூசாமல் பொய் சொல்கிறார்கள்.

நாங்கள் அங்கு காத்திருந்த நேரத்தில் இன்னொரு நபர் நாடி ஜோதிடம் பார்க்க வந்திருந்தார். அவரிடம் பேசியதில் அவர் இதுவரை நாலாயிரம் ரூபாய்  நாடி ஜோதிடத்திற்கு செலவழித்து விட்டாராம். இன்னும் அவர் பிரச்சினை தீரவில்லையாம்.

எங்களுக்கு  சொன்னது பொது காண்டம். இதற்கு மட்டுமே 500 ரூபாய். இது போல் ஏழு காண்டங்கள் உள்ளதாம். ஒவ்வொரு காண்டத்துக்கும் தலா 500 ரூபாய் ஆகும் என்றார். ஆளை விட்டால் போதும் என்று ஓடி வந்து விட்டேன்.

வீட்டுக்கு  வந்த பிறகு அங்கு நடந்த ஒவ்வொரு விஷயங்களையும் விலாவாரியாக எடுத்து சொல்லி புரிய வைத்ததால் என்னை அங்கு கூட்டிச்சென்றவருக்கும் இதன் மேல் நம்பிக்கை குறைந்து விட்டது. இனிமேல் யாரையும் அங்கு கூட்டிச் செல்ல மாட்டார் என்று நினைக்கிறேன்.

ஏமாற்றுக்கார ஜோதிடர்களுக்கு என்னுடைய கேள்விகள்:

எல்லா விவரங்களையும் எங்கள் வாயில் இருந்தே வரவழைப்பதற்கு ரேகை எதற்கு?

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஓலைகளில் ஆங்கில தேதி எப்படி இருக்க முடியும்?

உலகில் உள்ள அனைவருக்கும் ஓலை இருக்கும் என்கிறீர்கள். இதுவரை தோன்றி மறைந்த மனிதர்கள் எத்தனை கோடி பேர். இனிமேல் பிறக்கப்போகின்றவர்கள் எத்தனை கோடி பேர். இவ்வளவு பேருடைய ஓலைகளை உங்கள் சிறிய அறையில் எப்படி வைக்க முடியும்?

திருமணம் ஆகாத ஒருவருக்கு வரப்போகும் கணவன்/மனைவி பெயர் ஏன் உங்கள் ஓலைகளில் இருப்பதில்லை? அவருக்கு திருமணம் ஆன  பிறகு மட்டும் எப்படி ஓலையில் பெயர் வருகிறது?

அப்பாவி ஏழை மக்களை ஏமாற்றி கொள்ளை அடிக்கிறீர்களே? உங்கள் மனசாட்சி உங்களை உறுத்தவே உறுத்தாதா?

Tuesday, January 15, 2013

எஜமானனுக்காக காத்திருக்கும் மாடு (புகைப்படம்)


போதையில் இருந்தாலும் மாட்டை எவனும் ஆட்டையை போட்டுரக்கூடாதுனு தெளிவா இருக்காரு.

க்ளிக்கிய இடம்: வளசரவாக்கம்

பிரபல (?) பதிவுகள்